மிக் 21 போர் விமானத்தை பாக். சுட்டு வீழ்த்தியது, விமானி பிடிபட்டுள்ளார்.. இந்தியா அறிவிப்பு
இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. அதை செலுத்திய விமானி அபிந்தனைக் காணவில்லை. அவர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.

இன்று காலை பாகிஸ்தானின் எப்-16 போர் விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் புகுந்த பின் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல் 2 எப்-16 விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டன. இந்த நிலையில் விமானி அபிந்தன் செலுத்திய மிக் 21 ரக போர் விமானம் மட்டும் திரும்பி வரவில்லை. அது என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது.


அதை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக செய்திகள் வெளியாகின. அபிந்தன் பிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இருப்பினும் அதை மத்திய அரசு உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த செய்தியை மத்ச்திய வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில் மிக் 21 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதன் விமானி பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த 2 பாக் விமானங்கள் குண்டு வீசிவிட்டு பறந்தன. அந்த விமானங்களை இந்திய விமானங்கள் வழி மறித்து தாக்கின . பாகிஸ்தானின் எப் 16 போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது. பாக் விமானம் அந்த நாட்டின் பகுதியில் விழுந்தது.

இந்த மோதலின்போதுதான் இந்திய விமானப்படையின் மிக் 21 போர் விமானமும் சுடப்பட்டது என்றார். மிக் 21 வீழ்த்தப்பட்டதை விட விமானி பாகிஸ்தானிடம் பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.