வேடந்தாங்கல்
வேடந்தாங்கல்

வேடந்தாங்கல் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். இவ்வூரில் உள்ள பறவைகள் சரணாலயம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. இவ்விடத்திற்கு கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆசுத்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும்.

இங்கு வரும் பறவைகளில் நீர்க்காகங்கள், பலவித கொக்குகள், நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

நம் நாட்டின் சிறிய பறவை புகலிடங்களில் (மொத்தப் பரப்பு 40 ஹெக்டேர் மட்டுமே)ஒன்றாகவும் மிகவும் பழமை வாய்ந்ததுமான வேடந்தாங்கல், சிறப்பான வரலாற்றைப் பெற்றுள்ளது. வெகு நாட்கள் முன்னிலிருந்தே இக்கிராமத்து மக்கள் பறவை எச்சங்கள் வயல்வெளிகளுக்கு இயற்கை உரங்களாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தனர்.

இங்கு, 400 ஆண்டுகளுக்கு முன்னிலிருந்தே பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து சென்றுள்ளன. 1700ம் ஆண்டுகளில் கிராம உள்ளூர் பண்ணையார்கள் பறவைகளை வேட்டையாடும் இடமாக இது இருந்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து, 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வேட்டையாடி பொழுதை கழிக்க வேடந்தாங்கலை பயன்படுத்திக் கொண்டனர். வேடந்தாங்கல் என்றால் வேடர்களின் கிராமம்’ என்று அர்த்தம். கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1797 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இலயோனசு பிளெசு என்பவர் வேடந்தாங்கலைப் பறவைகள் சரணாலயம் என்று ஆய்வு செய்து பத்திரம் வெளியிட்டார்.

வேடந்தாங்கலுக்கு குடிபெயர்ந்து வரும் பறவைகள் உள்ளன எனினும், அவையனைத்தும் இங்கு இனப்பெருக்கம் செய்வதில்லை; ஏனெனில், ஒரு பறவையினம் எங்கு இனப்பெருக்கம் செய்கின்றதோ அதுவே அதன் தாய்நாடாகும்.அதாவது ஒரு பறவை இந்தியாவில் இனப்பெருக்கம் செய்தால் அது இந்தியத்துணைக்கண்டப் பறவை என்று தான் இனங்காட்டப்படும். வேடந்தாங்கலுக்கு வரும் ஐரோப்பியப் பறவையினங்களான ஊசிவால் வாத்து (Northern pintail), உள்ளான் (Common sandpiper), பழுப்பு வாலாட்டி (Grey wagtail), Blue-winged teal  போன்றவை ஐரோப்பியக் குளிரைத் தவிர்ப்பதற்காக பலவிடங்களுக்கு செல்லும்; வழியில் இங்கும் வந்து செல்லும். அதாவது, அவை தம் இனப்பெருக்கவிடமான அவற்றின் தாய்நாட்டிலிருந்து உணவிடமான குடிபெயர் நாட்டிற்குச் செல்கின்றன.

பல வருடங்களுக்கு முன்னர் வேடந்தாங்கலில் ஒரு சிறகி சுடப்பட்டு கீழே வீழ்ந்தது; அதன் கால்களில் மாஸ்கோ என்று பதிக்கப்பட்ட ஒரு வளையம் (பறவைகளின் இயக்கம் பற்றி அறிய பறவையியலாளர்கள் அணிவிக்கும் வளையம்) இருந்தது; அதிலிருந்துதான் சைபீரியாவிலிருந்து அரியவகைப் பறவைகளும் அலபாமா ஊசியிலைக்காடுகளில் இருந்து இணையைத் தேடி சில பறவைகளும் இங்கு வருவதாக ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. இது உண்மையான கருத்தல்ல. 2014ஆம் ஆண்டில் மட்டும் 35,000 பறவைகளுக்கு மேல் இங்கு வந்து சென்றுள்ளன. அதோடு 1,45,212 மக்கள் வந்து பறவைகளைக் கண்டு சென்றுள்ளனர்.