கோரையாறு அருவி
கோரையாறு அருவி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள கோரையாறு கிராமத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பச்சைமலை மீது கோரையாறு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்நீர் வீழ்ச்சியில் மலை உச்சியிலிருந்து தண்ணீர் கொட்டும் இடத்தில் 60 அடி ஆழம் கொண்ட நீர் தேக்கமும் உள்ளது.


இவ்வ‌ருவியில், சாதாரண மழைபெய்தால் கூட நீர் கொட்டும். குறிப்பாக அக்டோபர் மாதத்தின் இறுதியில் தொடங்கி, நவம்பர், டிசம்பர் மாதங்களே கோரையாறு அருவியின் சீசன் நாட்களாகும். இந்த மழைநீர் கோரையாறு, தொண்டமாந்துறை வழியாக கல்லாற்றில் கலக்கிறது. 


பெரம்பலூரிலிருந்து வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம் வழியாக தொண்டமாந்துறைக்கு சென்று, அங்கிருந்து விஜய புரம், அய்யர்பாளையம் வழியாக பச்சைமலை அடிவாரத்திலுள்ள கோரையாறு கிராமத்திற்கு செல்ல வேண்டும். இந்த கோரையாறு கிராமம் வரை அரசு டவுன் பஸ் செல்கிறது. கார், மோட்டார் சைக்கிள்களிலும் செல்லலாம்.


இதன்பிறகு பச்சைமலை மீது இடையிலுள்ள ஆற்றை கடந்து 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். அங்கு உயரத்திலிருந்து கருங்கல் பாறைகள் சூழ்ந்த குளத்திற்குள் ஆர்ப்பரித்தபடி அருவி நீர் கொட்டுவதை கண்டால் உள்ளமே கொள்ளை போகும்.