தங்க நகை வியாபாரம் செய்பவர்கள்,தங்க நகை ஆபரண தொழில்களில் ஈடுபடுவோர் தங்களது தொழில் சிறந்து விளங்க வழிபடவேண்டிய  (சித்தர்கள் வணங்கிய )
இலுப்பூர்
பொன் வாசிநாதர் கோவில் பற்றி தெரியுமா?
தங்க நகை வியாபாரம் செய்பவர்கள்,தங்க நகை ஆபரண தொழில்களில் ஈடுபடுவோர் தங்களது தொழில் சிறந்து விளங்க வழிபடவேண்டிய  (சித்தர்கள் வணங்கிய ) இலுப்பூர் பொன் வாசிநாதர் கோவில் பற்றி தெரியுமா?

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ளது பொன்னை(தங்கத்தை) வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம்.

பட்டினத்தார், வராகமுனிவர் , இடங்கழிநாயனார் , கொங்கனி சித்தர், சித்தர் சுருளிஆண்டவர், ஸ்ரீ சந்திரசேகர பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் வழி பட்ட திருத்தலம்.

புதுக்கோட்டை அருகே உள்ளது இலுப்பூர். இலுப்பை மரங்கள் நிறைந்து விளங்கியதால் ‘இலுப்பையூர்’ என அழைக்கப்பட்டு, பின்னர் அதுவே மருவி தற்போது ‘இலுப்பூர்’ என அழைக்கப்படுகிறது.

இங்குதான் பொன்னை (தங்கத்தை) வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம் இருக்கிறது.

இங்குள்ள பொன்வாசிநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இங்கு கோயில் கொண்டுள்ள சிவபெருமானின் பெயர்  ஹேம விருத்தீஸ்வரர்.

தமிழில் பொன்வளர்ச்சி நாதர் என்று அழைக்கப்பட்டு, பின்னர் மருவி பொன்வாசி நாதர் என்று ஆனது.

அம்பாள் சொர்ணாம்பிகை.   தமிழில் பொன்னம்மாள். சொர்ணம் என்றால் பொன் என்று பொருள்.

இந்த ஆலயத்தின் காலம் உறுதியாகக் கூற முடியவில்லை.

எனினும் முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவற்றில் காணப்படும் கல்வெட்டுகளில், குலசேகர பாண்டியன் (1190-1218) மற்றும் சுந்தர பாண்டியன் (1218-1244) ஆகியோரது கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

எனவே இந்த ஆலயம் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


ஆலய அமைப்பு:

ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.

ஆலயத்தின் முன்னால் ஒரே கல்லால் செய்த கொடி கம்பம் உள்ளது.

இக்கொடி கம்பத்தின் அடிப்பகுதியில் கிழக்கில் விநாயகர், வடக்கில் ஒற்றை காலை மடக்கி தவம் புரியும் முனிவரின் உருவம், மேற்கில் லிங்கத்தின் மீது பால் பொழியும் பசுவின் சிற்பம், தெற்கில் பீடத்தின் மீது அமர்ந்து காணப்படும் முனிவரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

இதனை அடுத்து 16 கால் மண்டபம் உள்ளது.

கோவிலின் நுழைவு வாசலில் மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது.

உள்ளே நுழைந்ததும் முன் மண்டபம் உள்ளது.

கொடி கம்பம், பலி பீடம், நந்தி ஆகியவை இங்கு காட்சி தருகின்றன.

முன் மண்டபம் 12 தூண்களுடனும், யாளி, ஆறு கரங்களுடன் நர்த்தன விநாயகர் மற்றும் நாயக்கர் மன்னர்களின் உருவங்களுடனும் காணப்படுகிறது.

வலது புறம் நடராஜ சபை அழகிய வேலைப்பாடுகளுடன் காட்சி அளிக்கிறது.

அடுத்ததாக சிறப்பு மண்டபமும், அதை அடுத்து மகா மண்டபமும் உள்ளன.

மகா மண்டபத்தின் வலது புறம் அன்னை சொர்ணாம்பாள் சன்னிதி உள்ளது.

அன்னையின் இன்னொரு பெயர் ‘பொன்னம்மாள்’ என்பதாகும்.

அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் இறைவன் பொன்வாசி நாதர், லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

இறைவனின் பிறபெயர்கள் ‘ஹேம விருத்திஸ்வரர்’ மற்றும் ‘பொன் வளர்ச்சி நாதர்’ என்பதாகும்.

இதுவே நாளடைவில் மருவி ‘பொன்வாசி நாதர்’ என அழைக்கப்படுகிறது.

இங்கு அன்னை தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தன் மேலிரு கரங்களில் தாமரை மலரைத் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரை காட்டியும்  லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய மூன்று தேவிகளின் சக்தியுடன் இணைந்து கருணையுடன் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.

இறைவனின் வட்டவடிவ விமான கோபுரத்தில் அஷ்டதிக்கு பாலகர்கள், எட்டு திசையை நோக்கி காவல் புரிவது போல் காணப்படுகிறது.

இது போன்ற அமைப்பு உள்ள விமானத்தை மிகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்த பழமையான சிவன் கோவில்களில் மட்டும்தான்  காணலாம்.

இந்த ஆலய திருச்சுற்றின் தெற்கில் நால்வர் திருமேனிகளும், மேற்கில் கன்னிமூலை கணபதி,
வீர விநாயகர், லட்சுமி நாராயணன், விசுவநாதர், விசாலாட்சி, பூரண - புஷ்கலா சமேத ஐயனார், ஸ்ரீதேவி- பூதேவி சமேத மகாவிஷ்ணு, வீரபத்ரர், அருணகிரிநாதர், ஆத்ம லிங்கம், கஜலட்சுமி ஆகியோர் திருமேனிகள் அருள்பாலிக்கின்றன.

வடக்கில் சண்டிகேசுவரர் சன்னிதியும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள், கிழக்கில் பட்டினத்தார் திருமேனிகளும் உள்ளன.

மேற்கு பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் சுப்ரமணியருக்கு கந்த சஷ்டி உற்வசம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி யின் போது ஆறு நாட்களும் ஸ்தந்த ஹோமம் நடை பெறுவதுடன் சூரசம்ஹாரமும்
சிறப்பாக நடைபெறுகிறது.

நவராத்திரியின் போது ஒன்பது நாட்களும் இறைவன், இறைவிக்கு சகஸ்ரநாம பாராயணம் நடை பெறுவதுடன், பத்தாம் நாள் இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடையப்பட்டி கிராமம் சென்று அம்பு போடும் வைபவமும் நடைபெறுகிறது.

இறைவனின் தேவக் கோட்டத்தில் தென்புறம் கொங்கணச் சித்தர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, துர்க்கை, பிச்சாடனர் அருள்பாலிக்கின்றனர் இறைவியின் தேவ கோட்டத்தில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்திகள் அருள்பாலிக்கின்றனர்.

தேவர்களின் குருவான குரு பகவான், ‘இத்தல இறைவன் பொன்வாசி நாதரையும், இறைவி பொன்னம்மாள் அம்பிகையையும் வழிபட்டுதான், 'பொன்னன்’ என்ற பெயரை பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் இத்தலத்தில் வழிபாடு செய்வோருக்கு பொன்னும் பொருளும் விருத்தியாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

தவிர அட்சய திருதியை நன்னாளில் இத்தலத்தில் வழிபாடு செய்வோருக்கு அனைத்து நலன்களும் விருத்தியாகும் என் நம்ப்படுகிறது.

சித்திரை மாதம் 10 நாட்கள் இங்கு பிரம்மோற்சவம் நடை பெறுகிறது.

8-ம் நாள் திருக்கல்யாண உற்சவமும், 9-ம் நாள் தேரோட்டமும் நடைபெறுகிறது.

10-ம் நாளில் தீர்த்தவாரியுடன் விழா இனிதே நிறைவுபெறுகிறது.

இந்த நாட்களில் பஞ்ச மூர்த்திகள் தினசரி காலை, மாலை என இரு வேளையும் வீதியுலா வருகிறார்கள்.

ஆலயத்தின் தல விருட்சம் வில்வம் மற்றும் மகிழ மரம்.

இறைவியின் சன்னிதியின் வலது புறம் பள்ளியறையும், இடது புறம் காலபைரவர் சன்னிதியும் உள்ளன.

கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ ஆராதனைகள் நடை பெறுகிறது.

திருமணம் நடைபெற வேண்டியும், குழந்தை பெற வேண்டியும் பள்ளியறையில் 48 நாட்கள் பால் பழம் வைக்க, அவர்கள் வேண்டுதல் நிறைவேறுவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

ராமபிரானும், லட்சுமணரும் சீதா பிராட்டியைத் தேடி தென் திசை செல்லும் போது, இத்தலத்தின் வழியாக சென்றதாகவும் அப்போது இங்குள்ள இறைவன் -இறைவியை சிவபூஜை செய்து வழிபட்டதாகவும் ஐதீகம் உள்ளது.

பொன் தொடர்பான தொழில்களில் சிறப்புற்று விளங்கியது இலுப்பூர்.

‘சொர்ணம்’ என்றால் ‘பொன்.’

தங்க நகை வியாபாரம் செய்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து தங்கள் பெயரிலேயே பொன்னைக் கொண்ட இத்தல இறைவன், இறைவிக்கு அபிஷேகங்கள் செய்து அர்ச்சனை தட்டில் தங்க நகைகளுடன் ஆராதனை செய்து வழிபட்டால் தங்க நகை தொழிலில் முன்னேற்றம் காண்பது உண்மை.

தங்க நகை வியாபாரம் செய்பவர்கள் சுவாமி, அம்பாள் ஆகியோரது பெயரில் பொன்(தங்கம்) சம்பந்தப்பட்டு வருவதால் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு  அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்த பின்பு நகைக்கடையினை துவங்குகின்றனர்.  

ஆண்டு தோறும் அட்சய திருதியை நாளில் தங்க நகை கடை உரிமையாளர்கள் சார்பில் இக்கோயிலில் சிறப்பு யாகங்கள் நடத்தப்படுகின்றன.

இதேபோல் தங்க நகை ஆபரணத் தொழில் புரிவோருக்கும் உற்ற இறைவனாக பொன்வாசிநாதர் விளங்குகிறார்.

புதியதாய் நகை வாங்கும் பக்தர்கள் அர்ச்சனை தட்டில் பூ, பழம், தேங்காயுடன் வாங்கிய நகைகளை வைத்து இறைவன் இறைவியை ஆராதனை செய்வது இங்கு வழக்கமாக உள்ளது.

இதனால் அவர்கள் மேலும் மேலும் நகைகள் வாங்குவது நிஜம்.

களவு போன நகைகள் திரும்ப கிடைப்பதற்கு பாதிக்கப்பட்ட பக்தர்கள், இங்கு அருள்பாலிக்கும் இறைவன், இறைவிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் ஒரு மண்டல காலத்திற்குள் களவு போன நகைகள் திரும்ப கிடைப்பது உறுதியாம்.

இந்த ஆலயத்தை வழிபாடு செய்து பேறு பெற்றவர்கள்:

அஷ்டமா சித்தி  பெற்ற பட்டினத்தாரால் பாடல்பெற்ற திருத்தலமாக இக் கோயில் விளங்குகிறது.

ஒரு முறை இலுப்பூர்  வந்த பட்டினத்தடிகளார்  பொன்வாசிநாதரை போற்றி"பிறவாமை வேண்டும்"என்று பதிகம் பாடி அருளியுள்ளார்.

வராகமுனிவர் இக்கோயிலில் சிவபெருமானை நோக்கி தவம்  புரிந்துள்ளார் என்பதற்கான சான்றுகள், கோயில் கல்தூண்களில் சிற்பங்களாக உள்ளன.

இலுப்பூரை சுற்றியுள்ள சித்தன்னவாசல், விராலிமலை, திருச்சி உள்ளிட்ட  இடங்களுக்குத் தவம் இயற்றி சித்தி
பெறவந்த சித்தர்கள் பலர் இக்கோயிலில் உள்ள பொன்வாசிபெருமானை வணங்கி அருள் பெற்றுள்ளனர்.

63 நாயன்மார்களில் ஒருவரான  இடங்கழிநாயனார் இக்கோயிலுக்கு வந்து தொண்டுகள் பல செய்து இறைவனை வணங்கியுள்ளார்.

பதினெண் சித்தர்களில் ஒருவரான கொங்கணி சித்தர், விராலிமலை முருகப்பெருமானிடம் அஷ்டமா சித்தி பெற்ற அருணகிரிநாதர் இலுப்பூர் வந்து  பொன்வாசிநாதரை வணங்கி அருள் பெற்றுள்ளனர்.

பல ஆண்டுகள் வாழ்ந்து அருள் வழங்கிய சித்தர் சுருளிஆண்டவர் இலுப்பூர் வந்து சிவபூஜை செய்துள்ளார்.  

காஞ்சி ஸ்ரீ சந்திரசேகர பரமாச்சாரிய சுவாமிகள் இலுப்பூர் வந்து  21 நாட்கள் தங்கி பொன்வாசிநாதரையும், சொர்ணாம்பிகை அம்பாளையும் வணங்கி  வழிபட்டுள்ளார்.

இக்கோயிலின் உப கோயிலாக அலமேலு மங்கை கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது.

இங்கு திருமணங்கள் அதிக அளவில் நடக்கிறது.

பொன்வாசி  நாதர் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தின் போது இக்கோயிலில் இருந்து சீர் கொண்டு போகும் முறை இன்று வரை வழக்கத்தில் உள்ளது.

இக்கோயிலின் மற்றொரு உப கோயிலாக தரம்தூக்கி பிடாரியம்மன் கோயில் உள்ளது.

இங்கு சித்திரை மாதம் பூச்சொரிதல் விழாவும் திருவிழாவும் சிறப்பு மிக்கது.

இக்கோயிலில்  வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சம்பழத்தில் விளக்கு போட்டு வழிபாடு நடத்துவது சிறப்பம்சம்.

இலுப்பூர் பொன்வாசிநாதர் ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.


அமைவிடம்

விராலிமலையில்  இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் உள்ளது.

மேற்கூறிய மூன்று ஊர்களில் இருந்தும் நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

பொன்னை வாரி வழங்கும் இத்தல இறைவன் பொன்வாசி நாதரையும் அன்னை பொன்னம்மாளையும் நாமும் ஒருமுறை தரிசித்து பயன் பெறலாமே!