இறுதிப் போட்டிக்கு தகுதி - டெல்லிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடந்த முதலாவது குவாலிஃபைர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். எனவே முதலில் பேட்டிங் செய்ய டெல்லி கேபிட்டல்ஸ் அணி களம் கண்டது.

தொடக்க ஆட்டக்காரர்களில் ரன் சேர்க்க தடுமாறிய ஷிகர் தவான் 7 ரன்னில் அவுட் ஆன நிலையில், மறுமுனையில் இருந்த பிருத்வி ஷா அந்த அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். இதனால் டெல்லி அணி பவர் பிளே முடிவில் டெல்லி 2 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்தது.

எனினும் அவருடன் மறுமுனையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஸர் பட்டேல் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதை பொருட்படுத்தாமல் தனது அதிரடியை தொடர்ந்த பிருத்வி ஷா 27 பந்துகளில் தனது அரைசத்தை பதிவு செய்தார். 34 பந்துகளில் 3 சிக்ஸர் 7 பவுண்டரிகளை விளாசி 60 ரன்கள் சேர்ந்திருந்த அவர் ஜடேஜாவின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.

டெல்லி அணி அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து தடுமாறி வந்த நிலையில் களத்தில் இருந்த கேப்டன் ரிஷப் பண்ட் – சிம்ரான் ஹெட்மியர் ஜோடி விக்கெட் சரிவை நீண்ட நேரம் தடுத்து நிறுத்தியது. இந்த ஜோடியில் 24 பந்தில் 1 சிக்ஸர் 3 பவுண்டரிகளை விரட்டி 37 ரன்கள் சேர்த்த சிம்ரான் ஹெட்மியர் பிராவோ வீசிய 18.4வது ஓவரில் ஜடேஜா வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

களத்தில் இறுதிவரை ஆடிய கேப்டன் பண்ட் தனது அரைசத்தை (35 பந்துகளில் 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள்) பதிவு செய்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் சேர்த்தது.

சென்னை அணி சார்பில் துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, மொயீன் அலி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 173 ரன்கள் கொண்ட இலக்கை சென்னை அணி துரத்திய சென்னை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து இருந்தாலும் தொடர்ந்து வந்த ராபின் உத்தப்பா மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவருடன் கைகொடுத்து ஆடிய ருதுராஜ் கெய்க்வாட்டும் மறுமுனையில் அதிரடி காட்டினார்.

இந்த ஜோடியில் 63 ரன்கள் (44 பந்தில், 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உட்பட) சேர்த்த ராபின் உத்தப்பா டாம் கரண் வீசிய 13.3 ஓவரில் ஷ்ரேயஸ் ஐயர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அம்பதி ராயுடு (1), ஷர்துல் தாக்கூர்(0) சொற்ப ரன்னில் வெளியேறினர். எனினும் தனது அதிரடியை தொடர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்தார். அவர் 70 ரன்கள் (50 பந்தில், 2 சிக்ஸர், 5 பவுண்டரிகள் உட்பட) சேர்த்த நிலையில் ஆவேஷ் கான் வீசிய 18.1 ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

2 பவுண்டரிகளை விரட்டிய மொயீன் அலி 16 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். தொடர்ந்து வந்த கேப்டன் தோனி 6 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளை பறக்கவிட்டு தனது பாணியில் ஆட்டத்தை முடித்து வைத்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 173 ரன்கள் கொண்ட இலக்கை சென்னை அணி 20 ஓவர்களில் 2 பந்துகள் மீதம் இருக்க 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த மிரட்டலான வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தோல்வியை தழுவியுள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணி நாளை நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணியை நாளை மறுநாள் நடக்கும் 2வது குவாலிஃபைர் சுற்றில் எதிர்கொள்கிறது.