உணவே மருந்து’ என்பார்கள் அந்த பழமொழிக்கேற்ப உள்ள உணவுகளில் ரசமும் ஒன்று. ஏனென்றால் ரசத்தில் முக்கியமான சில மசாலா பொருட்களை சேர்க்கிறோம். அவை நமது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. மேலும் பாக்டீரியாவால் வரும் தொல்லைகளுக்கு முடிவு கட்டுகிறது.
இவ்வளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ள ரசத்திற்கு எப்படி பொடி செய்யலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மல்லி – 1/2 கப்
கருவேப்பிலை
மிளகு – 1/4 கப்
சீரகம் – 1/4 கப்
கடலை பருப்பு – 1/4 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
மஞ்சள் தூள்
பெருங்காயம்
செய்முறை
ரசம் பொடி செய்வதற்கு பொருட்களை தனித்தனியாக வறுத்து கொள்வது அவசியமாகும். அந்த வகையில் முதலில் ஒரு சிறிய கனமான பாத்திரம் எடுத்து அதில் மல்லியை கொட்டி அவற்றை மிதமான சூட்டில் வைத்து நன்கு வறுக்கவும். வாசனைக்காக சில கருவேப்பிலைகளை சேர்த்துக்கொள்ளலாம். வறுத்த பிறகு அவற்றை தனியாக எடுத்தது வைத்துக்கொள்ளலாம்.
பின்னர், மிளகு மற்றும் சீரகம் எடுத்து தனித்தனியாக வறுத்து கொள்ளவும். பிறகு கடலை மற்றும் துவரம் பருப்பை ஒன்றாகவே சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து காய்ந்த மிளகாயையும் தனியாக வறுத்து எடுக்கொள்ளவும்.
இப்போது வறுத்த அனைத்து பொருட்களும் நன்றாக சூடு ஆறிய பிறகு, மிக்சியில் ஒன்றாக போட்டு ஓரளவு நன்றாக அரைத்து கொள்ளவும். அப்படி அரைத்த பிறகு அவற்றுடன் மஞ்சள் போடி மற்றும் பெருங்காயம் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக அரைக்கவும்.
நீங்கள் எதிர்பாத்த ரசம் பொடி தயாராக இருக்கும். அவற்றை ஒரு டப்பாவில் எடுத்து வைத்து தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.